குருவருள்

குருவருள்
குருவே சரணம்

செவ்வாய், 4 மே, 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி (07) - நற்றிணை




294. குறிஞ்சி
தோழிகூற்று

பாடியவர் : புதுக்கயத்து, வண்ணக்கன் கம்பூர்கிழான்

தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு
 நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய்பயின்று 
எருவை நீடிய பெருவரை அகந்தொறும்
தொன்றுறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் (05)

கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே. (09)

தலைவியே! மூங்கில் செறிந்து, கொறுக்கச்சி எங்கும் படர்ந்து பரவிய, பெரிய மலையிடம் எங்கும் தொன்று தொட்டு எழுந்து  வந்த மலையெங்கும் தொன்றுதொட்டு  எழுந்து வந்த பகைமையின் அடிப்படையில் மாறுபாடு கொண்டு மிகவும் சினந்து புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டது போன்ற சிவந்த செழுமைமையான அரும்புகள் மலர்ந்த காந்தள் பூக்கள் மலையிடம் எங்கும் மணம் வீசும் மலைநாடனது அகலமான மார்பானது பொறுத்துக் கொள்ள இயலாத நெருப்பையும், பொறுத்தற்குரிய இனிமையான காற்றையும் பெற்றதைப்போல துன்பத்தையும், இன்பத்தையும் ஒன்றாகப் பெற்றுள்ளது. இது பொய்யில்லை. உண்மையே ஆகும் என்பதி நீ அறிவாயாக. 

 தலைவன் அருகில் இருக்கும் சமயம் தலைவி அழகு கொண்டு இன்புற்று மகிழ்ச்சி அடைவதும், தலைவன் பிரிகையில் துன்பமடைந்து வருத்தம் அடைவதும் மாயம் அன்று.