குருவருள்

குருவருள்
குருவே சரணம்

திங்கள், 1 மார்ச், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி - [02] நற்றிணை விருந்து ( 1 )



001  குறிஞ்சி

தலைவி கூற்று

 {  தலைவன் பிரியக் கருதியது அறிந்த தோழி அதனைத் தலைவியிடம் கூற, தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறியது. }

நின்ற சொல்லர் நீடுதோன்(று) இனியர்;
என்றும் என்தோள் பிறிபறி யலரே
தாமரைத் தந்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தேன் போலப்,
புரைய மன்ற, புரையோர் கேண்மை 
நீரின்(று) அமையா உலகம் போலத் 
தம்மின்(று) அமையா நம்நயந்(து) அருளி;
நறுநுதல் பசத்தல் அஞ்சிச் 
சிறுமை யுறுபவோ? செய்பு அறியலரே.

பதவுரை :


தோழீ ! நம் காதலர்,
 நின்ற சொல்லர் - நிலைமை தவறாத வாய்மை
                                        உடையவர்,
 நீடு தோன்று இனியர் - நெடிதாக தோன்றுகின்ற இனிமை
                                                     உடையவர்,
என்றும் எந்தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என்
                                      தோள்களை பிரிய வேண்டும் என்ற
                                      எண்ணமிலாதவர்,
புரையோர் கேண்மை - அப்படிப்பட்ட சான்றோருடைய நட்பு,
தாமரைத் தண்தாது - தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தினையும்,
மீமிசை - மேலோங்கிய,
சாந்தின் (தாது)-சந்தனத்தின் பொடியையும்,
ஊதி - குடைந்தெடுத்து,
தொடுத்த - அந்தச் சந்தன் மரத்தில் வைத்த,
தீந்தேன் போல - இனிய தேன் போல,
மன்ற புரைய - திண்ணமாகச் சிறந்தன,
(ஆதலின்)நீரின்றமையாஉலகம் போல் - நீரை 
                                       இன்றியமையாத உலகியல் போல,
தம்மின்று அமையா - அவர் தம்மையின்றி அமையாத,
நம் நயந்தருளி - நம்மிடம் முன்பு விருப்பம் மிக வைத்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சி - (பின்பு பிரிதலால்) நம் நறிய 
                                                                           நெற்றி பசலை ஊர்தற்கு அஞ்சி,
சிறுமை உறுபவோ - (செய்வது அறியாராய்த்)தடுமாற்றம் 
                                                      அடைவாரோ?
செய்பு அறியலர் - அவ்வாறு செய்யார் காண்.  


முடிபு :


பிரிவு அறியலர், புரைய மன்ற, அஞ்சிச் சிறுமை உறுபவோ,
செய்பு அறியலர் என் முடிக்க.


கருத்து:தலைவர் சான்றோர் ஆகையால், பிரிவால்
                  நாம் படுந்துன்பம் கண்டஞ்சி நம்மை விட்டுப் பிரியார்.


நயம் :  தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தம் - தலைவனது உள்ளத்திற்கும்,
                     சந்தனத்தின் பொடி -  தலைவியின் உள்ளத்திற்கும், 
                                                                        உவமையாயிற்று.
               இருவருள்ளமும் ஒன்றுபட்ட போது, சந்தன் மரத்திலே இனிமையான தேன் கூடு வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் என்று பொருள் நயம் காண்க.


பசலை பாய்தல் - வாயினால் ஊதும் போது கண்ணாடியில் ஆவி படர்வது போலத் தலைவன் பிரிவினால் தலைவியின் நெற்றியில் ஒளி குறைந்து நிறம் மாறுபடும்.இதனைப் பசலை எனவும், பீர் எனவும் கூறுவர்.                                
           
உலகமானது நீரின்று இயங்காது போல் தலைவியானவள் தலைவனை பிரிந்து இயங்காளென்ற நயம் உணர்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக