குருவருள்

குருவருள்
குருவே சரணம்

திங்கள், 19 ஏப்ரல், 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி - [04] குறுந்தொகை


குறுந்தொகை - பாடல் [3]

[வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டு மென்னும்  எண்ணமுடையவளாகி அவன் காதிற்படுமாறு அவனத் நட்பைப் பழித்துக் கூறினாள். அதுபோது தலைவி அந்நட்பு மிகச் சிறப்பு உடையது என்று உணர்த்தியது.]

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
இயற்றியவர் : தேவகுலத்தார்.

( தலைவன் வேலிக்குப் புறம்பாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயல்பை இழித்துக் கூறியபோது  தலை மகள்  இயற்பட கூறியது )

மலைப் பக்கத்திலுள்ள வலிமையான கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, நாட்டை உடைய தலைவனோடு  நான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலமுடையது. ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. எனவே தலைவனோடு செய்த நட்பு மிகச் சிறந்தது.

விளக்கம் : பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை குறிஞ்சி  மலரும். அம்மலரினின்று தேனீக்களால் எடுக்கப்படும் தேன் மிக்க சுவைதரும். அப்படிப்பட்டச் சுவையான,  அளவில் பெரியதான  மலைத்தேனை உடைய  நாட்டிற்கு உரியவனாகியவன் நம் தலைவன். ஆகவே அவனும் உயர்ந்தவன்தான். எனவே நம் தலைவனைப் பழித்துக் கூறாதே.

இப்பாடலில்  நிலம், வான், கடல், என்ற மூன்றும்  பெருமைக்கு எல்லையாகக் கூறப்பட்டுள்ளன.

காலத்தி நாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  (102)
பயன்றுக்கார் செய்த வுதவி நயன்றூக்கின்
நன்மை கடலிற் பெரிது  (103)
வானுயர் தோற்ற மெவன் செய்யுந் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்  (272) 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக